ஷா ஆலம், ஆக 23– மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் அவர்கள் தனது உரையில் குறிப்பட்டபடி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மாநில சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசியல்வாதிகளிடம் காணப்படும் பதவிப் போராட்டம் சிலாங்கூர் மாநிலத்திற்கும் பரவி விடக்கூடாது என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்கள் தமது உரையில் தெளிவாக கூறியுள்ளதாக அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர்களும் இது போன்ற விஷயங்களில் தலையிடாமல் மக்கள் நலனில் மட்டும் முக்கியத்தும் தருவார்கள் என எதிர்பார்க்கிறேன். அரசியலைக் குறைத்து மக்கள் தடுப்பூசியை பெறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றார் அவர்.
சண்டையிடுவோர் சண்டையிட்டுக் கொண்டிருக்கட்டும். சிலாங்கூரைப் பொறுத்த வரை நாம் கோவிட்-19 தடுப்பு மற்றும் பொருளாதார மீட்சி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவோம் என்றார் அவர்.
14வது மாநில சட்டமன்றத்தின் நான்காம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரின் தொடக்க நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, எஸ்.ஒ.பி. விதிமுறைகளைப் கடைபிடிப்பதில் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் காட்டி வரும் ஈடுபாடு மனநிறைவு அளிப்பதாக உள்ளதாக கூறிய இங், கூட்டத் தொடர் முடியும் வரை இந்நிலை நீடிக்கும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகச் சொன்னார்.