ஷா ஆலம், ஆக 26- சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் பதிவான 313,075 கோவிட்-19 சம்பவங்களில் 17.1 விழுக்காடு அல்லது 53,571 சம்பவங்கள் வேலையிடங்களில் பரவியவை என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அவற்றில் 62 விழுக்காடு அல்லது 33,214 சம்பவங்கள் உற்பத்தி துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் மூலம் பரவியதாக அவர் சொன்னார்.
சேவைத் துறையில் 7,768 சம்பவங்களும் கட்டுமானத் துறையில் 7,232 சம்பவங்களும் வர்த்தக துறையில் 5,357 சம்பவங்களும் பதிவானதாக அவர் குறிப்பிட்டார்.
இது தவிர, தனியார் மருத்துவ மையங்களில் தொழிலாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கோவிட்-19 சோதனைகளில் பலருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று சிஜங்காங் உறுப்பினர் டத்தோ டாக்டர் யூனுஸ் ஹைரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமிருடின் அவ்வாறு சொன்னார்.
சிலாங்கூர் மாநில அரசு ஊராட்சி மன்றங்கள் மற்றும் சுகாதார அமைச்சு, உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு, அனைத்துலக வாணிக மற்றும் தொழிலியல் அமைச்சு வாயிலாக தொழிற்சாலைகள் மீது சோதனை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நடவடிக்கையின் கீழ் 2,457 தொழிற்சாலைகள் சோதனையிடப்பட்டு 455 தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்ட வேளையில் மேலும் 237 தொழிற்சாலைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.