புத்ரா ஜெயா, செப் 10- மலேசியாவில் இரண்டு டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றவர்கள் மத்தியில் ஏற்பட்ட மரண எண்ணிக்கை 0.009 விழுக்காடாகும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
நாட்டில் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்களின் மரண எண்ணிக்கை 10 லட்சம் பேருக்கு 90 பேராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும் உயிரைக் காப்பாற்றுவதிலும் கோவிட்-19 தடுப்பூசிகள் ரக வேறுபாடின்றி ஆக்ககரமான பலனைத் தருவதை இது காட்டுகிறது என்று அவர் சொன்னார்.
ஆகவே, ஆகவே தடுப்பூசி உயிரைக் காக்க உதவுமா என சந்தேகம் கொள்ளாமல் அனைவரும் விரைந்து தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக வீட்டிலேயே உயிரிழக்கும் (பி.ஐ.டி.) சம்பவங்கள் குறித்து கருத்துரைத்த அமைச்சர், கடந்த ஆகஸ்டு மாதம் வரை கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக 2,417 பேர் வீட்டிலேயே மரணமடைந்துள்ளதாக அவர் கூறினார். அவர்களில் 86 விழுக்காட்டினர் மருத்துவ கண்காணிப்பில் இல்லாதவர்கள் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மருத்துவ கணிகாணிப்பு இல்லாதவர்கள் மத்தியில் ஏற்படும் பி.ஐ.டி. சம்பவங்களைக் கட்டுப்படுத்துவற்கான வியூகங்களும் திட்டங்களும் தீவிரப்டுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.