கோலாலம்பூர், செப் 13- பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் கலந்துரையாடல் ஜனநாய மரபினை கடைபிடிக்கும்படி அனைத்து தரப்பினரையும் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டின் அரசு நிர்வாகத்தை வழி நடத்துவதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பளிக்கும் அரசாங்கத்தின் வெளிப்படை போக்கை தாம் வரவேற்பதாக அவர் சொன்னார்.
நாட்டில் புதிய அரசியல் சூழலை உருவாக்குவதற்கும் அரசு நிர்வாகத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் ஏதுவாக அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைப்பை நல்கும் புதிய அணுகுமுறை வரவேற்க்கத்தக்கது என்பதோடு பாராட்டுக்கும் உயரியது அவர் குறிப்பிட்டார்.
பதினான்காவது நாடாளுமன்றத்தின் நான்காம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரை இன்று தொடக்கி வைத்து உரையாற்றுகையில் மாமன்னர் இவ்வாறு தெரிவித்தார்.
மலேசிய குடும்ப உணர்வை ஏற்படுத்தக் கூடிய ஒற்றுமை, ஒருங்கிணைப்பு மற்றும் சமத்துவம் ஆகியவை பல்வேறு சவால்களை எதிர்கொள்வதற்குரிய ஆற்றலை நாட்டிற்கு ஏற்படுத்தும் என்றும் அவர் சொன்னார்.
கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிராக போராடுவதிலும் சுகாதாரப் பிரச்னை மற்றும் பொருளாதார சிக்கல்களால் நெருக்கடியை எதிர் நோக்கியிருக்கும் மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவதற்கும் முழு மூச்சாக பாடுபடும்படி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.
மலேசியா அமைதி, சுபிட்சம் மற்றும் நல்லிணக்கம் நிறைந்த நாடாக தொடர்ந்து விளங்குவதை உறுதி செய்ய அனைத்து விதமான சச்சரவுகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.