ஷா ஆலம், செப் 13- கோவிட்-19 தடுப்பூசி பெற்ற ஏழு நாட்களுக்குள் இரத்த தானம் செய்வதை தவிர்க்கும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தடுப்பூசியினால் எந்த பக்க விளைவும் ஏற்படாதவர்கள் ஏழு நாட்களுக்கு பிறகும் பக்க விளைவு உள்ளவர்கள் அதிலிருந்து முற்றாக குணமடைந்தப் பின்னரும் இரத்த தானம் செய்யலாம் என்று தேசிய இரத்த மையம் கூறியது. பைசர்-பயோன்டெக், அஸ்ட்ராஸேனேகா மற்றும் சினோவேக் தடுப்பூசியை பெற்றவர்கள் இந்த ஆலோசனையை பின்பற்ற வேண்டும் என்று அம்மையம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. தங்களையும் மற்றவர்களையும் பாதுகாப்பதற்கு ஏதுவாக கோவிட்-19 தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு இரத்த தானம் செய்வோரை அம்மையம் கேட்டுக் கொண்டது. முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசியை பெறுவதற்கு இடையில் உள்ள கால அவகாசத்தில் பொதுமக்கள் இரத்த தானம் செய்யலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதர வகை தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் இரத்த தானம் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை அம்மையம் பின்னர் வெளியிடும்.