கோலாலம்பூர், செப் 15– கோவிட்-19 நோய்த் தொற்றை எதிர்கொள்வதில் இந்தோனேசியாவுக்கு உதவும் வகையில் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனைங்களை மலேசியா அந்நாட்டிற்கு இன்று வழங்கியது.
சுபாங்கிலுள்ள அரச மலேசிய ஆகாயப்படைத் தளத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்த பொருள்களை வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா மலேசியாவுக்கான இந்தோனேசியத் து தர் ஹேர்மோனோவிடம் ஒப்படைத்தார்.
இரு நாடுகளுக்குமிடையே காணப்படும் அணுக்கமான ஒத்துழைப்பை புலப்படுத்தும் வகையில் இந்த உதவி அமைவதாக சைபுடின் கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்றை எதிர்கொள்வதில் அண்டை நாடுகள் என்ற முறையில் மலேசியாவும் இந்தோனேசியாவும் ஒன்றுபட்டு செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 நோய்த் தொற்று மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை மலேசியா இன்னும் எதிர்நோக்கி வந்தாலும் தன்னால் இயன்ற உதவிகளை பிற நாடுகளுக்கு வழங்குவதில் அப்பிரச்னைகள் நாட்டிற்கு ஒரு போதும் தடையாக இருந்ததில்லை என்று அவர் சொன்னார்.
இதனிடையே, மலேசியா வழங்கிய இந்த உதவிக்கு தாங்கள்பெரிதும் நன்றி கூறக் கடமைபட்டுள்ளதாக ஹெர்மோனோ கூறினார்.
எங்களைப் பொறுத்தவரை இந்த உதவி மிகவும் பொருள் பொதிந்த ஒன்றாகும். சொந்த நாட்டில் கோவிட்-19 பாதிப்பை தொடர்ந்து எதிர்நோக்கி வந்தாலும் அண்டை நாடுகளுக்கும் உதவ வேண்டும் என்ற மலேசிய அரசாங்கத்தின் வேட்கை பெரிதும் போற்றத்தக்கது என்றார் அவர்.