ஷா ஆலம், செப் 17- கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுக்கும் முயற்சியாக சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக் குழுவை விரைந்து அமைத்த மாநில அரசின் நடவடிக்கை சரியான ஒன்றாகும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். கோவிட்-19 நோய்த் தொற்றை எதிர் கொள்வதிலும் கையாள்வதிலும் நாடு எந்த முன் அனுபவத்தையும் கொண்டிராத நிலையில் திடீரென ஏற்பட்ட அந்நோயின் தாக்கம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அவர் சொன்னார். இந்நோய் குறித்து நிபுணர்களிடம் விளக்கம் பெறவும் அதனை சமாளிப்பதற்கான வழிகளை ஆராய்வதற்கும் அதிக நேரம் தேவைப்பட்டது. அதேசமயம் விரைவாக முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது என்று அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து முன்னாள் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது தலைமையில் சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக் குழுவை அமைத்தோம் என்றார் அவர். "சிலாங்கூரின் கோவிட்-19 முற்றுகை" எனும் தலைப்பில் முகநூல் வாயிலாக வெளியிட்ட ஆவணப்படத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்தாண்டு மார்ச் 10 ஆம் தேதி இந்த பணிக் குழு தொடங்கப்பட்டது. இந்த பணிக் குழுவில் நான்கு மருத்துவ நிபுணர்கள், மாநில சுகாதார இலாகா மற்றும் பேரிடர் பிரிவின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். இதனிடையே,வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் சிலாங்கூரை விவேக மாநிலமாக மாற்றும் மாநில அரசின் திட்டத்திற்கு இந்த கோவிட்-19 பெருந்தொற்று மறைமுகமாக உதவி செய்துள்ளதாகவும் அமிருடின் கூறினார். இந்நோய் தொற்று பரவியது முதல் பல்வேறு துறைகளில் குறிப்பாக சிறு வணிகத்தில் இலக்கவியல் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.