கோலாலம்பூர், செப் 18- நாட்டில் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நேற்று மொத்தம் 22,970 பேர் இந்நோய்த் தொற்றிலிருந்து விடுபட்ட வேளையில் 17,577 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டின் கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 23 ஆயிரத்து 248 பேராக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். தீவிர சிகிச்சைப் பிரிவில் 1,223 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 891 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்று உள்ளவர்கள் என சந்தேகிக்கப்படும் 332 பேரிடம் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர். செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ள 720 பேரில் 410 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய 310 பேர் இன்னும் சோதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார். நேற்று நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 17,333 பேர் அதாவது 98.6 விழுக்காட்டினர் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட நோயாளிகள் என்றும் எஞ்சியோர் மூன்றாம்,நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட பாதிப்பை எதிர் நோக்கியவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.