கோலாலம்பூர், செப் 30- நாட்டில் நேற்று வரை 18 வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்களில் 85.7 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 53 ஆயிரத்து 472 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்.
அதே சமயம், 94.1 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 20 லட்சத்து 17 ஆயிரத்து 43 பேர் குறைந்த து ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரத்துவ அகப்பக்கமான “கோவிட்நாவ்“ கூறியது.
இதனிடையே, நேற்று வரை 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 40,206 பேர் அதாவது 1.3 விழுக்காட்டினர் முதலாவது டோஸ் தடுப்புசியை பெற்றுள்ளனர்..
நேற்று இரு தரப்பையும் சேர்ந்த 310,661 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 290,599 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 148,062 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.
இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 67 ஆயிரத்து 580 ஆகும்.
நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 208 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கையுடன் சேர்ந்து அந்நோய்த் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 26,143 ஆக உயர்ந்துள்ளது.