கோலாலம்பூர், அக் 2- நாடு முழுவதும் நேற்று பதிவான 11,889 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களில் 179 அல்லது 1.5 விழுக்காடு மட்டுமே கடும் பாதிப்பை கொண்டிருந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். அவர்கள் அனைவரும் மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட பாதிப்பை எதிர் நோக்கியுள்ள நிலையில் எஞ்சிய 11,710 பேர் அல்லது 98.5 விழுக்காட்டினர் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்று அவர் சொன்னார். நிமோனியா எனும் நுரையீரல் அழற்சி பாதிக்கப்பட்டவர்கள் மூன்றாம் கட்ட நோயாளிகளாக வகை படுத்தப்பட்ட வேளையில் நான்காம் கட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவியும் ஐந்தாம் கட்ட நோயாளிகளுக்கு செயற்கை சுவாசக் கருவியும் தேவைப்படும். , நேற்று நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட 11,875 பேரில் 11,000 பேர் உள்நாட்டினர் என்றும் 875 பேர் வெளிநாட்டினர் என்றும் அவர் தெரிவித்தார். இந்நோய்த் தொற்றிலிருந்து நேற்று 15,891 பேர் குணமடைந்ததாக கூறிய அவர், இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 70 ஆயிரத்து 715 ஆக உயர்ந்துள்ளது என்றார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2020/10/FW1084273_PTJ08_03102020_KKM_BN202010021249-960x675.jpg)