கோலாலம்பூர், அக் 3- இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நாட்டிலுள்ள மூத்த குடிமக்களில் 7.9 விழுக்காட்டினர் அல்லது 177,220 பேர் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
அக்காலக்கட்டத்தில் மூத்த குடிமக்களை சம்பந்தப்படுத்திய 106 தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டதோடு அதன் மூலம் 3,598 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு 220 மரணங்கள் சம்பவித்ததாக அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டின் 38 வது நோய்த் தொற்று வாரம் வரையிலான காலக்கட்டத்தில் 14,248 மரணச் சம்பவங்கள் (56.6%) பதிவு செய்யப்பட்டன. தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் அமலாக்கம் காரணமாக நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து வருவதை இது காட்டுகிறது என அவர் குறிப்பிட்டார்.
இம்மாதம் 29 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 31 லட்சத்து 48 ஆயிரத்து 438 மூத்த குடிமக்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றதாக கூறிய அவர், மேலும் 33 லட்சத்து 65 ஆயிரத்து 443 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்றார்.
இம்மாதம் 26 ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்கள் பராமரிப்பு இல்லங்களில் தங்கியிருப்போர் மற்றும் பராமரிப்பாளர்களில் 66.8 விழுக்காட்டினர் அதாவது 19,641 பேர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.