HEALTHMEDIA STATEMENTNATIONAL

சுக்மா போட்டி- 45 தங்கப் பதக்க இலக்கை சிலாங்கூர் மறு ஆய்வு செய்யும்

ஷா ஆலம், அக் 5- கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இரு முறை ஒத்தி வைக்கப்பட்டு அடுத்த ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் சுக்மா போட்டியில் 45 தங்கப் பதக்கங்களை வெல்லும் இலக்கை சிலாங்கூர் மறு ஆய்வு செய்யவுள்ளது.

கல்வியைத் தொடர்வதற்காக பல விளையாட்டாளர்கள் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளும் சாத்தியம் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் இந்த பதக்க இலக்கு மறு ஆய்வுக்குட்படுத்தப்படுவதாக சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றத்தின்  தலைமை செயல்முறை அதிகாரி முகமது நிசாம் மர்ஜூகி கூறினார்.

விளையாட்டு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து பயிற்சியைத் தொடங்கவிருக்கும் குழுக்களுடன் சந்திப்பு நடத்தியப் பின்னர் தாங்கள் இந்த முடிவை எடுத்ததாக அவர் சொன்னார்.

ஜொகூர் மாநிலத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் அப்போட்டி விளையாடடுக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படாத போதிலும் விளையாட்டாளர்கள் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும் எனத் தாங்கள் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

2020 ஆம் ஆண்டிற்கான சுக்மா விளையாட்டுப் போட்டி கடந்த 2020 ஜூலை 11 முதல் 19 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.  எனினும் அப்போட்டி இவ்வாண்டு மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. கோவிட்-19 நோய்த் தொற்று மோசமடைந்ததைத் தொடர்ந்து அப்போட்டி மறுபடியும் ஒத்தி வைக்கப்பட்டது.

இப்போட்டியில் 45 தங்கம், 40 வெள்ளி மற்றும் 40  வெண்கலப் பதக்கங்களை வெல்ல சிலாங்கூர் இலக்கு நிர்ணயித்திருந்தது.


Pengarang :