கோலாலம்பூர், அக் 5- நாட்டில் நேற்று வரை 2 கோடியே 6 லட்சத்து 3 ஆயிரத்து 249 பேர் அல்லது 88 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
இதன் வழி நாட்டில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கையை 90 விழுக்காடாக உயர்த்தும் இலக்கை அடைய இன்னும் 2 விழுக்காடு மட்டுமே எஞ்சியுள்ளது.
நாட்டிலுள்ள 2 கோடியே 20 லட்சத்து 98 ஆயிரத்து 764 பேர் அல்லது 94.4 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ அகப்பக்கமான கோவிட்நாவ் கூறியது.
மேலும், 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 114,124 பேர் அல்லது 3.6 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
நேற்று நாடு முழுவதும் 221,812 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அவர்களில் 126,433 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 95,379 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.
இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 4 கோடியே 45 லட்சத்து 73 ஆயிரத்து 891 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு நேற்று இருவர் பலியாகினர். அவ்விரு மரணங்களும் மருத்துவமனைக்கு வெளியே நிகழ்ந்தன. இதன் மூலம் கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,759 ஆக உயர்ந்துள்ளது.