கோலாலம்பூர், அக் 5- மருத்துவ காரணங்களுக்காக கோவிட்-19 தடுப்பூசியைப் பெற இயலாதவர்கள் மைசெஜாத்ரா செயலியில் சிறப்பு இலக்கவியல் சான்றிதழ் அல்லது தடுப்பூசி விலக்களிப்பு சான்றிதழ் பெற மாவட்ட சுகாதார அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வாமைப் பிரச்னை உள்ளிட்ட காரணங்களுக்காக தடுப்பூசியைப் முடியாதவர்கள் தங்களுக்கு சிகிச்சையளிக்கும் பதிவு பெற்ற மருத்துவர்களிடமிருந்து அதற்கான சான்றுக் கடிதத்தை பெற வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
சம்பந்தப்பட்ட நபர்கள் நேரடியாக சுகாகார மையங்களுக்கு வர வேண்டும் என்பதோடு பதிவு பெற்ற மருத்துவ நிபுணர் வழங்கிய ‘குறிப்பிட்ட மருத்துவ காரணங்களுக்காக சம்பந்தப்பட்ட நோயாளிக்கு கோவிட்-19 தடுப்பூசியை செலுத்த முடியாது‘ என்ற உறுதிக் கடிதத்தையும் சமர்பிக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
அந்த சான்றுக் கடிதத்தை சம்பந்தப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை வழங்கிய தனியார் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் அல்லது அரசாங்க மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் உறுதிப்படுத்தியிருக்கே வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாரங்கள் முழுமையானதாகவும் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தும் இருந்தால் ஒரு வார காலத்திற்குள் அந்த சான்றிதழ் மைசெஜாத்ரா செயலியில் இடம் பெறும் என்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது அவர் குறிப்பிட்டார்.
மருத்துவப் பிரச்னையை எதிர்நோக்குவோர் பொருத்தமான வேறு தடுப்பூசிகளை பெறுவதற்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவர் என்றும் அவர் சொன்னார்.