ஷா ஆலம், அக் 10- இளம் பாலகர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தாவாஸ் எனப்படும் சிலாங்கூர் மைந்தர் வாரிசு நிதித் திட்டம் மீண்டும் தொடங்கப்படும்.
இத்திட்டத்தை தரம் உயர்த்துவதற்காக முதலீட்டுத் தொகுப்புகளை சிலாங்கூர் அரசு தயார் செய்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கடந்த 2008 ஆம் ஆண்டில் தாவாஸ் திட்டத்தை தொடக்கிய போது பயனாளிகள் 1,500 வெள்ளியைப் பெறுவர் என வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும், வாக்குறுதியளித்தபடி நிதி ஒதுக்கீட்டை ஏற்பாடு செய்ய முடியாததால் அத்திட்டத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அவர் சொன்னார்.
கிள்ளான், விண்ட்ஹம் தங்கும் விடுதியில் சிலாங்கூரிலுள்ள சமூகத் தலைவர்களுக்கு 2022 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் குறித்து விளக்கமளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாவாஸ் அறவாரியத்தினால் நிர்வகிக்கப்பட்டு இந்த திட்டம் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆண்டு தொடங்கப்பட்டது.
சிலாங்கூரில் பிறந்த குழந்தைகளுக்காக இந்த தாவாஸ் திட்டம் தொடங்கப்பட்டது. மூன்று வயதுக்கும் குறைவான குழந்தைகளை இத்திட்டத்தில் பதிவு செய்ய முடியும். அக்குழந்தைகள் 18 வயதை அடையும் போது 1,500 வெள்ளியைப் பெறுவர்.