ஷா ஆலம், அக் 12- பெக்காவானிஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில சமூக நல மற்றும் மகளிர் நல மன்றம் மீடியா சிலாங்கூர் பணியாளர்கள் 30 பேருக்கு சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது.
சுமார் 7,500 வெள்ளி மதிப்பிலான இந்த சுகாதார பாதுகாப்பு உபகரணப் பொட்டியில் முகக் கவசம், கிருமி நாசினி, துவாலை, வைட்டமின் சி மாத்திரை ஆகிய பொருள்கள் உள்ளதாக பெக்காவானிஸ் தலைவர் டத்தின் ஸ்ரீ மஸ்டியானா முகமது கூறினார்.
வழக்கமாக, மருத்துவர்கள் மற்றும் போலீஸ் துறையினரைத்தான் முன்களப் பணியாளர்கள் என கூறி வருகிறோம். ஆனால் பத்திரிகையாளர்களை நாம் மறந்து விடுகிறோம். அவர்களின் செயலும் போற்றத்தக்க ஒன்றே என்று அவர் சொன்னார்.
பெக்காவானிஸ் நிகழ்ச்சிகளையும் மாநில அரசின் இதர நிகழ்வுகளையும் இடைவிடாமல் பிரசுரித்தும் ஒளிபரப்பியும் வரும் மீடியா சிலாங்கூர் குழுமத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றார் அவர்.
நேற்று மந்திரி புசாரின் அதிகாரத்துவ இல்லத்தில் நடைபெற்ற இந்த சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
பெக்காவானிஸ் நிகழ்வுகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதோடு அதன் நிகழ்வுகளையும் வெளியிட்டு உதவுமாறு மீடியா சிலாங்கூர் குழுமத்தை அவர் கேட்டுக் கொண்டார்.
வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் மீடியா சிலாங்கூரின் அனைத்து பணியாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்வை பெக்காவானிஸ் ஏற்பாடு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.