கோலாலம்பூர், அக் 12- தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை 98.18 விழுக்காட்டை எட்டியுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் (சிறப்பு விவகாரங்கள்) டத்தோஸ்ரீ டாக்டர் அப்துல் லத்திப் அகமது கூறினார்.
நாட்டிலுள்ள 16 லட்சம் அரசாங்க ஊழியர்களில் 1.92 விழுக்காட்டினர் மட்டுமே இன்னும் தடுப்பூசி பெறவில்லை என்பதை இது காட்டுகிறது என்று அவர் சொன்னார்.
அரசாங்கம் ஊழியர்கள் உள்பட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் இயக்கம் தொடர்ந்து தன்னார்வலர் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
மக்களவையில் இன்று ஸ்ரீ காடிங் பெஜூவாங் உறுப்பினர் டத்தோ டாக்டர் சம்சுடின் முகமது சாலே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
தடுப்பூசி பெற மறுக்கும் அரசு ஊழியர்களின் நிலை மற்றும் அத்தகையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியம் குறித்து டாக்டர் சம்சுடின் கேள்வியெழுப்பியிருந்தார்.
விருப்பம் இல்லாதவர்களை தடுப்பூசி பெறுவதற்கு கட்டமாயப்படுத்துவதற்கு விஷேச விதிமுறைகள் தேவைப்படுவதோடு அதனை மிகவும் விவேகத்துடன் மேற்கொள்ளவும் வேண்டியுள்ளது என அமைச்சர் அப்துல் லத்திப் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் மற்றும் கனடாவைப் போல் தடுப்பூசி பெறுவதை கட்டாயமாக்க அரசாங்கம் இன்னும் திட்டமிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போதைக்கு, தடுப்பூசி பெறாதவர்களுக்கு உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதற்கான அனுமதி மறுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சொன்னார்.