சுபாங் ஜெயா, அக் 28- சுபாங் ஜெயா மாநகர் மன்ற (எம்.பி.எஸ்.ஜே.) பணியாளர்களில் 99.21 விழுக்காட்டினர் அல்லது 1,500 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
மேலும், 1,509 பேர் அல்லது 99.80 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டார் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.
மாநகர் மன்றப் பணியாளர்களில் ஏறக்குறைய அனைவரும் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள போதிலும் அவர்கள் தொடர்ந்து எஸ்.ஒ.பி. விதிகளை கடைபிடிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன் என அவர் சொன்னார்.
நெரிசலான மற்றும் குறுகலான இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதோடு கைகளை சோப்பினால் அடிக்கடி கழுவுவது, முகக் கவசம் அணிவது, கைக்குலுக்குவதை தவிர்ப்பது, உடல் வெப்பத்தை அளவிடுவது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நேற்று நடைபெற்ற மாநகர் மன்றத்தின் முழு அளவிலான கூட்டத்திற்கு தலைமையேற்று உரை நிகழ்த்திய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த கூட்டம் சமூக ஊடங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இதனிடையே, நோய்த் தொற்று பரவியது முதல் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி வரையில் மாநகர் மன்றப் பணியாளர்களில் 258 பேர் கோவிட்-19 நோயத் தொற்றுக்கு இலக்கானதாக நோராய்னி சொன்னார்.
எனினும், இந்நோயினால் பாதிக்கப்பட்ட பணியாளர்களில் யாரும் கடுமையான பாதிப்புக்கு இலக்காகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.