கிள்ளான், அக் 31- சிலாங்கூர் மக்கள் கல்வித் திட்டத்தை (பி.டி.ஆர்.எஸ்) தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்துமாறு மாநில அரசு வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்தாணடு முதல் நீடித்து வரும் கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக இயங்கலை வாயிலாக நடத்தப்படும் பாடங்களால் மாணவர்களின் கலகவித்தரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு மாநில அரசு அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இதன் தொடர்பிலான அறிவிப்பை வெளியிடும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் கூறினார். தற்போது, பி.டி.ஆர்.எஸ். திட்டம் எஸ்.பி.எம். தேர்வு எழுதும் ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. இந்த திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் எனது கோரிக்கையாகும் என்று லியோங் டக் சீ சொன்னார். இத்திட்டத்தில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஏனெனில் அவர்களால் தனியார் துறையால் வழங்கப்படும் டியூஷன் வகுப்புகளுக்குச் செல்ல முடியாது என்றார் அவர். இன்று பண்டமாரான் விளையாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இளளயோருக்கான செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.