ஷா ஆலம், நவ 3- தீபாவளியைக் மகிழ்ச்சியாக கொண்டாடும் அதே வேளையில் நாளை தொடங்கி வரும் ஞாயிற்றுக் கிழமை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவ மழை மற்றும் கடல் பெருக்கு அபாயத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி கிள்ளான் வட்டார மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நாளை அதிகாலை 5.21 மணிக்கு தொடங்கும் இந்த இயற்கை சீற்றம் காரணமாக அலைகள் 5.6 மீட்டர் வரை உயரும் என்பதோடு அதனுடன் அடை மழையும் பலத்த காற்றும் சேர்ந்து கொள்ளும் பட்சத்தில் வெள்ளப் பேரிடர் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக கோலக் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான் ஹூரி கூறினார்.
தாமான் தெலுக் காடோங் பகுதியில் ஆறு குடும்பங்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடவிருக்கின்றன. இந்த குடியிருப்பு தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உள்ளது என்றார் அவர்.
வெள்ள அபாயத்தை கருத்தில் கொண்டு இப்பகுதி மக்களுக்கு உதவுவதற்கான ஏற்பாடுகளை நானும் அரசாங்கத் துறைகளும் செய்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
தாமான் தெலுக் காடோங் தவிர்த்து, தாமான் கேம், தாமான் ஸ்ரீ பெரேம்பாங், தாமான் செலாட் டாமாய், தாமான் செலாட் செலாத்தான் ஆகிய பகுதிகளும் வெள்ள அபாயத்தை எதிர் நோக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இப்பகுதிகளில் வசிப்போர் தங்கள் வாகனங்களை மேடான பகுதிகளுக்கு அப்புறப்படுத்துவதோடு உடனடிய உதவி கோருவதற்கு ஏதுவாக கைபேசி போன்ற தொடர்பு உபகரணங்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.