ஷா ஆலம், நவ 27- வரும் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் சமூக நலன் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கியதன் மூலம் மாநில அரசு மக்கள் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகிறது.
பொது மக்கள் எதிர்பார்த்த இத்தகைய திட்டங்கள் வாயிலாக மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவற்கு உதவ முடியும் என்று கோலக் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸான் ஜமான் ஹூரி சொன்னார்.
பொது மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப தரம் உயர்த்தப்பட்ட திட்டங்களில் கிஸ் எனப்படும் ஸ்மார்ட் சிலாங்கூர் அன்னையர் பரிவுத் திட்டம், கிஸ்-ஐ.டி. எனப்படும் தனித்து வாழும் அன்னையர் பரிவுத் திட்டம் ஆகியவையும் அடங்கும். இத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதோடு பயனாளிகளின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
இதனிடையே, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்த வரவு செலவுத் திட்டத்தி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை தாம் வரவேற்பதாக மோரிப் சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள் பகாருடின் கூறினார்.
சுமார் ஒரு கோடி வெள்ளி செலவில் சுங்கை கெலாம்பு- கெந்திங் சென்யன் சாலை இணைப்புத் திட்டத்தின் வழி அப்பகுதியில் மேம்பாட்டு நடவடிக்கைகள் துரிதமடையும் என அவர் குறிப்பிட்டார்.