புத்ரா ஜெயா, டிச 7– எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் சென்.பெர்ஹாட் நிறுவன வழக்கின் மேல் முறையீட்டில் புதிய ஆதாரங்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பம் மீதான விசாரணையில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று ஆஜராகத் தவறினார்.
நஜிப் நீதிமன்றம் வரத் தவறியதைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு ஏதுவாக கைது ஆணை பிறப்பிக்கப்படும் என்று மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று எச்சரித்தது.
நஜீப்பை உடனடியாக நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு ஏதுவாக அவரை கைது செய்வதற்கான ஆணை பிறப்பிப்பது, அவரின் ஜாமீன் தொகையை ரத்து செய்வது அல்லது வழக்கு விசாரணையை இயங்கலை வாயிலாக நடத்துவது ஆகிய இரு தேர்வுகள் நீதிமன்றத்திற்கு உள்ளதாக மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு தலைமையேற்ற நீதிபதி டத்தோ அப்துல் கரீம் அப்துல் ஜாலில் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் எங்களுக்கு இரு தேர்வுகள் உள்ளன. அவரின் ஜாமீன் தொகையை ரத்து செய்து பறிமுதல் செய்வது மற்றும் அவரை நீதிமன்றத்திற்கு உடனடியாக கொண்டு வருவதற்கு ஏதுவாக அவருக்கு எதிராக கைது ஆணை பிறப்பிப்பது முதலாவது தேர்வாகும்.
இரண்டாவது தேர்வு,1964 ஆம் ஆண்டு நீதிமன்ற சட்டத்தின் கீழ் இரு தரப்பின் அனுமதியின்றி வழக்கு விசாரணையை இயங்கலை வாயிலாக நடத்துவதாகும் என அவர் சொன்னார்.
இயங்கலை வாயிலாக வழக்கை நடத்திய அனுபவம் எங்களுக்கு ஏற்கனவே உள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் சம்பந்தப்பட்ட தரப்பினர் இருந்த போதிலும் வழக்கை இயங்கலை வாயிலாக நடத்தியுள்ளோம். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மலேசியாவில்தான் உள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.
எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் நிறுவன ஊழல் வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து நஜிப் செய்துள்ள மேல்முறையீட்டின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, நஜிப்பின் வழக்கறிஞரான ஹர்விண்டர் சிங் எழுந்து, இந்த விசாரணையை நாளை வரை ஒத்தி வைக்கும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நஜிப்பின் பிரதான வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லாவின் மகனுடன் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் தொடர்பில் இருந்த காரணத்தால் இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.