ஷா ஆலம், டிச 7- தொழில்முனைவோரின் பொருள்களை செல்டேக் எனப்படும் சிலாங்கூர் இலக்கவியல் மின்- விநியோக திட்டத்தின் கீழ் விநியோகிக்கும் திட்டம் நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
பொது மக்களிடமிருந்து இத்திட்டத்திற்கு கிடைத்து வரும் அமோக ஆதரவின் அடிப்படையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுவதாக தொழில்துறை, வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.
இதர பொருள் விநியோகிப்பு நிறுவனங்களான போஸ் லாஜூ, லைன் கிளியர் மற்றும் லோஜிஸ்டிகா ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் 1,200 தொழில்முனைவோர் பதிந்து கொண்டுள்ளனர். இந்த விநியோகத் தளத்தின் வாயிலாக சுமார் 8,000 பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
இந்த தளத்தின் வாயிலாக மீன், கோழி, இறைச்சி, காய்கறிகள் மற்றும் பழ வகைகளையும் உறைய வைக்கப்பட்ட பொருள்கள் மற்றும் உலர்ந்த பொருள்களையும் அனுப்பலாம் என்று அவர் சொன்னார்.
சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளின் தயாரிப்பு பொருள்களை விநியோகிக்கும் பணியில் இந்த தளம் முன்னுரிமை அளித்து வருகிறது என்று மாநில சட்டமன்றத்தில் இன்று செல்டேக் திட்டத்தின் ஆக்கத் திறன் குறித்து பேசிய போது அவர் குறிப்பிட்டார்.