ஷா ஆலம், டிச 7- சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக கடந்த 2020 ஜனவரி முதல் கடந்த செப்டம்பர் வரை 55 மாணவர்கள் தாய் மற்றும் தந்தையை இழந்து ஆதரவற்றவர்களாக ஆகியுள்ளனர்.
உலு லங்காட், கிள்ளான் மற்றும் பெட்டாலிங் பெர்டானா மாவட்டங்களில் மிக அதிகமான மாணவர்கள் ஆதரவற்றவர்களாக ஆனதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
அக்காலக்கட்டத்தில் ஒட்டுமொத்தமாக 1,648 மாணவர்கள் ஆதரவற்றவர்களாக ஆனதை சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் தரவுகள் காட்டுகின்றன என்று அவர் சொன்னார்.
கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்த இம்மாணவர்களின் நிலை குறித்து மாநில அரசாங்கம் மிகுந்த கவலையும் அக்கறையும் கொள்வதோடு அவர்களுக்கு உதவுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஆதரவற்றவர்களாக ஆனவர்களின் எண்ணிக்கை குறித்து கம்போங் துங்கு உறுப்பினர் லிம் யீ வேய் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
அச்சிறார்களை பராமரிப்பதற்கு பொருத்தமானவர்களை அடையாளம் காண்பதும் மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் அடங்கும் என்று சித்தி மரியா சொன்னார்.
பராமரிப்பாளர்கள் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் சமூக நல இலாகாவின் பாதுகாப்பு கழகத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.