கோலாலம்பூர், டிச 12- நாட்டில் நேற்று புதிதாக 4,626 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. இதனுடன் சேர்த்து அந்நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 88 ஆயிரத்து 149 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 4,531 பேர் குறைந்த நோய்த் தாக்கம் கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
எஞ்சிய நோயாளிகள் நோய்த் தாக்கம் கடுமையாக உள்ள மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட பாதிப்புக்குள்ளானவர்கள் என்று அவர் தெரிவித்தார்.
இந்நோயாளிகளில் 396 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 211 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
நேற்று நாடு முழுவதும் 4,690 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் வழி இந்நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 96 ஆயிரத்து 509 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று புதிதாக ஆறு நோய்த் தொற்று மையங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து நாடு முழுவதும் தீவிரமாக உள்ள நோய்த் தொற்று மையங்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது.