MEDIA STATEMENTNATIONAL

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் எம்.ஏ.சி.சி. அதிகாரி கைது

புத்ரா ஜெயா, டிச 12- தலைநகரில் கடந்த வெள்ளியன்று கூட்டாகச் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் தமது துறையைச் சேர்ந்த்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதை ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) உறுதி செய்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் தமது தரப்பு போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதோடு அந்த அதிகாரியை அடையாளம் கண்டு அவரை நேற்று மாலை போலீசாரிடம் ஒப்படைத்ததாக அந்த ஆணையம் அறிக்கை ஒன்றில் கூறியது.

குற்றச்செயல்களில் ஈடுபடும் தங்கள் அதிகாரிகளுக்கு ஒருபோதும் பாதுகாப்பு அளிக்கப்படாது என்பதோடு அவர்கள் விஷயத்தில் விட்டுக் கொடுக்கும் போக்கும் கடைபிடிக்கப்படாது என்று எம்.ஏ.சி.சி. உறுதிபடத் தெரிவித்தது.

குற்றச்செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவது மற்றும் வேலை நீக்கம் செய்வது உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

கோலாலாம்பூர், ஜாலான் அம்பாங்கில் உள்ள வீடொன்றில் கும்பலாக புகுந்து பத்து லட்சம் வெள்ளி மதிப்புள்ள பொருள்களை கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரில் அமலாக்க நிறுவனம் ஒன்றின் அதிகாரி உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளதாக இணைய ஊடகம் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.


Pengarang :