|
|
கோலாலம்பூர், டிச 18– நாட்டில் நேற்று 4,362 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. முன்தினம் இந்த எண்ணிக்கை 4,262 ஆக இருந்தது.
இந்த புதிய தொற்றுடன் சேர்த்து கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 11 ஆயிரத்து 764 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பதிவான 4,362 கோவிட்-19 சம்பவங்களில் 4,334 உள்ளூரில் பரவிய வேளையில் எஞ்சிய 28 சம்பவங்கள் இறக்குமதியானவை என்று சுகாதாரத் துறைத் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். நேற்றைய தொற்றுகளில் 89 அல்லது 2.0 விழுக்காடு மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பைக் கொண்டவையாகும். எஞ்சிய 4,273 சம்பவங்கள் அல்லது 98 விழுக்காடு லேசான நோய்த் தாக்கம் கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவையாகும் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். நேற்று 5,098 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து நோயிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 25 ஆயிரத்து 245 ஆக உயர்ந்துள்ளது. 400 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் அவர்களில் 198 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. நேற்று புதிதாக ஆறு நோய்த் தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டன.