ஷா ஆலம், டிச 18- நேற்று மாலை முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோலக் கிள்ளான் தொகுதியிலுள்ள பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்று அதிகாலை 2.30 மணிவரை இத்தொகுதியைச் சேர்ந்த 1,130 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொகுதியின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையங்களில் அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதன் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஸமான் ஹூரி கூறினார். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் சொன்னார். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க விரும்புவோர் 017-2434200 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார். இதனிடையே, கம்போங் ஜோஹான் செத்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கபட்ட 800 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சுங்கை காண்டீஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி தெரிவித்தார். சுங்கை காண்டீஸ் தொகுதியில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக ஜேஹான் செத்தியாபகுதி விளங்குகிறது என்று அவர் கூறினார்.