ஷா ஆலம், டிச 23- பணி நிறுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நான்கு நீர் சுத்திகரிப்பு மையங்களில் செயல்பாடு நேற்று மாலை 6.30 மணியளவில் 92 விழுக்காட்டை எட்டியது. செராஸ் பத்து 11 நீர் சுத்திகரிப்பு மையம் நூறு விழுக்காடு முழுமையாக செயல்பட ஆரம்பித்துள்ள நிலையில் நீர் விநியோகம் இரவு 10.00 மணியளவில் வழக்க நிலைக்குத் திரும்பியதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது. செமினி 2 நீர் சுத்திகரிப்பு மையம் 100 விழுக்காடு முழுமையாகச் செயல்படத் தொடங்கியுள்ளதோடு சுமார் 70 விழுக்காட்டுப் பகுதிகளில் நீர் விநியோகம் சீரடைந்துள்ளதாக அது தெரிவித்தது. சுங்கை லங்காட் மற்றும் சுங்கை லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு மையங்களில் செயல்பாடுகள் முழுமையாக சீரடைந்து இரவு 11.00 மணியளவில் நீர் விநியோகம் தொடங்கப்பட்டது என அந்நிறுவனம் முகநூல் வழி குறிப்பிட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென நீர் மட்டம் உயர்ந்தது மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது ஆகிய காரணங்களால் நான்கு நீர் சுத்திகரிப்பு மையங்களில் நீர் சுத்திகரிப்பு பணிகள் தடைபட்டன. இதனால் பெட்டாலிங், உலு லங்காட் மற்றும் கோலாலம்பூரில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.