கோலாலம்பூர், ஜன 1- நாட்டில் நேற்று புதிதாக 3,573 கோவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன. இந்த புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் அந்நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 58 ஆயிரத்து 086 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று பதிவான நோய்த் தொற்றுகளில் 52 (1.5 விழுக்காடு) மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட பாதிப்பையும் 3,521 சம்பவங்கள் (98.5 விழுக்காடு) ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்ட பாதிப்பையும் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா கூறினார்.
நேற்றைய தொற்றுகளில் 3,230 உள்நாட்டில் பரவிய வேளையில் 343 வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டன என்று அவர் சொன்னார்.
கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து நேற்று 3,988 பேர் குணமடைந்தனர். இதன் வழி இந்நோயிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 85 ஆயிரத்து 378 ஆக உயர்ந்துள்ளது.
மொத்தம் 269 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 163 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்ட 5 புதிய நோய்த் தொற்று மையங்களுடன் சேர்த்து நாட்டில் தீவிரமாக உள்ள நோய்த் தொற்று மையங்களின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது.