கோலாலம்பூர், ஜன 4- நாட்டில் கோவிட்-19 தினசரி எண்ணிக்கை நேற்று 2,690 ஆக குறைந்தது. இதன் வழி நாட்டில் இந்நோய்த் தொற்று பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 67 ஆயிரத்து 044 ஆக பதிவாகியுள்ளது.
நேற்று பதிவான கோவிட்-19 சம்பவங்களில் 52 கடுமையான பாதிப்பைக் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்றும் எஞ்சியவை லேசான பாதிப்பை அல்லது பாதிப்புக்கான அறிகுறியைக் கொண்டிராத ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்றும் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 265 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 147 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
இந்நோய்த் தொற்றிலிருந்து 3,535 பேர் நேற்று குணமடைந்தனர். இதன் வழி இந்நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 95 ஆயிரத்து 751 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் நேற்று புதிதாக கண்டறியப்பட்ட மூன்று நோய்த் தொற்று மையங்களுடன் சேர்த்து நாட்டிலுள்ள மொத்த நோய்த் தொற்று மையங்களின் எண்ணிக்கை 206 உயர்ந்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் நோய்த் தொற்று எண்ணிக்கை குறித்து கருத்துரைத்த அவர், நேற்று புதிதாக பதிவான ஒரு சம்பவத்துடன் சேர்த்து மொத்தம் 461 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறினார்.