கிள்ளான், ஜன 16- சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் (எஃப்.ஏ.எஸ்.) தலைவர் பதவியை துங்கு அமிர் ஷா சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா தக்க வைத்துக் கொண்டார். சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் 69 மற்றும் 70 ஆம் ஆண்டு கூட்டத்தின் போது நடைபெற்ற 2022-2026 தவணைக்கான நிர்வாகக் குழு தேர்வில் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது. இந்த நியமனத்தின் வழி துங்கு அமீர் ஷா அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எஃப்.ஏ.எஸ். தலைவர் பதவியை வகிப்பார். சங்கத்தின் துணைத் தலைவராக டத்தோஸ்ரீ ஷாரில் மொக்தாரும் உதவித் தலைவர்களாக டத்தோ அப்துல் ராவுஃப் அகமது, டத்தோ பி. சுகுமாறன், முகமது யூனுஸ் @ இஸ்கந்தார் முகமது நோர், ஆர்.சந்திர சேகரன் ஆகியோர் நியமனம் பெற்றனர். இத்தேர்தலுக்கு 47 வேட்பு மனுக்கள் பெறப்பட்டதாகவும் அதில் ஒரு மனு தாமதமாக சமர்ப்பிக்கப்பட்டதால் நிராகரிக்கப்பட்டதாகவும் எஃப்.ஏ.எஸ். சுயேச்சை தேர்வு மன்றத்தின் பிரதிநிதி அனாஸ் ஷாபி கூறினார். வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அனைவரும் போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.