ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

88.1 விழுக்காட்டு இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், ஜன 16- நாட்டில்  நேற்று இரவு 11.59 மணி நிலவரப்படி 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 88.1 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 73 ஆயிரத்து 263 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும், 90.9 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 61 ஆயிரத்து 246 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இது தவிர  பெரியவர்களில் 97.8 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 29 லட்சத்து 2 ஆயிரத்து 459 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் மேலும் 99 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 31 லட்சத்து 82 ஆயிரத்து 938 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

நேற்று நாடு முழுவதும் 167,955 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் 985 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 897 பேர் இரண்டாவது  டோஸ் தடுப்பூசியையும் பெற்ற வேளையில் 166,073 பேருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 7 லட்சத்து 29 ஆயிரத்து 670 ஆக உயர்ந்துள்ளது.

இது வரை செலுத்தப்பட்ட ஊக்கத் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 92 லட்சத்து 12 ஆயிரத்து 282 ஆகும்.

இதனிடையே, நாட்டில் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 19 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.


Pengarang :