ஷா ஆலம், பிப் 4- குப்பைகளை எரிப்பதற்கு வைக்கப்பட்ட தீ அருகில் இருந்த பெரேடுவா மைவி ரகக் காரையும் எரித்தது. இச்சம்பவம் சபாக் பெர்ணம், சுங்கை பாஞ்சாங் பாரிட் 3 தீமோரில் நேற்று நிகழ்ந்தது.
இந்த தீச்சம்பவம் தொடர்பில் தமது தரப்பு நேற்று காலை மணி 10.46 அளவில் புகாரைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் ஹபிஷாம் முகமது நோர் கூறினார்.
சுங்கை பாஞ்சாங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த நால்வரங்கிய குழு தீயணைப்பு வண்டியில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் நிகழ்ந்த போது 38 வயதுடைய அக்காரின் உரிமையாளர் தனது வீட்டில் இருந்ததாக கூறிய அவர், குப்பைகளுக்கு தீயிட்ட போது அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு தீ பரவியது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார்.
அக்காரின் உரிமையாளர் தீயணைப்பு கருவியைக் கொண்டு தீயை அணைக்க முற்பட்டிருக்கிறார். அம்முயற்சி தோல்வி கண்ட நிலையில் தீயணைப்பு துறையின் உதவியை அவர் நாடியுள்ளார் என ஹபிஷாம் சொன்னார்.