ஷா ஆலம், பிப் 27- ஒன்பது மலேசியர்கள், அவர்கள் பாதுகாப்பில் உள்ள இரு உக்ரேன் பிரஜைகள் மற்றும் ஒரு சிங்கப்பூரியர் பயணம் செய்த வாகன அணி இன்று அதிகாலை 5.45 மலேசிய நேரப்படி உக்ரேன் நாட்டின் கியூ நகரிலிருந்து பாதுகாப்பாகப் போலந்து எல்லையை வந்தடைந்தது.
இந்த வாகன அணிக்குக் கியூ நகரிலுள்ள மலேசியத் தூதர் ஃபாடிலா டாவுட் தலைமையேற்றதாக விஸ்மா புத்ரா தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
அந்த வாகன அணியை போலந்திலுள்ள மலேசிய தூதரகத்தின் இரு அதிகாரிகள் வரவேற்றனர். அவர்கள் அனைவரும் பின்னர் போலந்து தலைநகர் வார்சோ நோக்கிப் பயணமாகினர்.
உக்ரேன் நாட்டிலுள்ள மலேசியர்களின் நிலை மற்றும் அவர்களின் இருப்பிடம் குறித்து அறிந்து கொள்ள விஸ்மா புத்ரா தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்து வந்ததாக அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.