MEDIA STATEMENT

புக்கிட் ராஜாவில் கார்-லோரி மோதல் இருவர் பலி

ஷா ஆலம், மார்ச் 2– இங்குள்ள புக்கிட் ராஜா போலீஸ் நிலையத்திற்கு எதிரே சாலையில் திரும்ப முயன்ற லோரியை கார் ஒன்று மோதியதில் அதில் பயணம் செய்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இச்சம்பவம் இன்று விடியற்காலை 2.29 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பெரடுவா பெஸ்ஸா ரகக் கார் லோரியுன் அடியில் புகுந்ததாகச்  சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நேராஸாம் காமீஸ் கூறினார்.

இரு ஆடவர்கள் பயணம் செய்த அக்கார் ஜாலான் ஹாஜி சீராட்டிலிருந்து காப்பார் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது லோரி ஒன்று திடீரெனச் சாலையில் ‘யு‘ வட்டமடித்துத் திரும்பியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் லோரியின் அடியில் நுழைந்து முழுமையாகச் சிக்கிக் கொண்டது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

காரின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட அவ்விருவரின் சடலங்களை தீயணைப்புத் துறையினர் கடும் போராட்டத்திற்குப் பிறகு 3.50 மணியளவில் மீட்டனர் என்று அவர் மேலும் சொன்னார்.

இவ்விபத்தில் சிக்கிய லோரியின் ஓட்டுநரை சம்பவ இடத்தில் காணவில்லை. அவர் அவ்விடத்தை விட்டு அகன்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றார் அவர்.


Pengarang :