ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 7,739 ஆக குறைந்தது

ஷா ஆலம், ஏப் 12- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் தொடர்ந்து பத்தாயிரத்திற்கும் கீழ் பதிவாக வருகிறது. நேற்று இந்நோய்த் தொற்றினால் 7,739 பேர் பாதிக்கப்பட்டனர்.

அதே சமயம் கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து நேற்று 19,049 ஆக பதிவானதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நேற்று குணமடைந்தவர்களுடன் சேர்த்து இந்நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்து 63 ஆயிரத்து 777 ஆக உயர்ந்துள்ளதாக அவர் சொன்னார்.

இந்நோய்த் தொற்று காரணமாக நேற்று 19 பேர் மரணமடைந்த வேளையில் நேற்று புதிதாக பதிவான  இரு நோய்த் தொற்று மையங்களுடன் சேர்த்து தீவிரமாக உள்ள தொற்று மையங்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது என்றார் அவர்.

மொத்த நோயாளிகளில் 2.1 விழுக்காட்டினர் அல்லது 2,794 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 174 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள வேளையில் 102 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

கடும் பாதிப்பை கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 67 ஆக அல்லது 0.87 விழுக்காடாக உள்ள வேளையில் அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறி கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 7,672 ஆக உள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பிரிவு வாரியாக வருமாறு-

1 ஆம் பிரிவு – 4,354 சம்பவங்கள் (56.26 விழுக்காடு)
2 ஆம் பிரிவு – 3,318 சம்பவங்கள் ( 42.87 விழுக்காடு)
3 ஆம் பிரிவு – 34 சம்பவங்கள் (0.44 விழுக்காடு)
4 ஆம் பிரிவு – 24 சம்பவங்கள் (0.18 விழுக்காடு)
5 ஆம் பிரிவு – 19 சம்பவங்கள் (0.25 விழுக்காடு)


Pengarang :