ஷா ஆலம், மே 2- முஸ்லீம் சமூகத்தினருக்கு குறிப்பாக சிலாங்கூரில் வசிப்பவர்களுக்கு மேன்மை தங்கிய சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் ராஜா பெர்மைசூரி நோராஷாகின் தம்பதியர் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
இவ்வாண்டு பெருநாள் புதிய இயல்பில் குதூகலத்துடனும் நல்லிணக்க உணர்வுடனும் கொண்டாடப்படும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர்கள் அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாண்டு நோன்புப் பெருநாளின் போது உற்றார் உறவினர்களைச் சென்று காண்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுப்பதற்கு ஏதுவாக இன்னும் அமலில் இருக்கும் சில நிலையான நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடிப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
நோன்புப் பெருநாளைக் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வோர் பாதுகாப்பான பயணத்தை பேற்கொள்ளுமாறு அரச அலுவலகத்தின் வாயிலாக வெளியிட்ட அந்த வாழ்த்துச் செய்தியில் சுல்தான் குறிப்பிட்டுள்ளார்.