ECONOMYMEDIA STATEMENTSELANGOR

முதலாவது சிலாங்கூர் திட்டம் -ஜூலை 25 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல்

ஷா ஆலம், மே 4- பதினான்காவது சிலாங்கூர்  சட்டமன்றத்தின் ஐந்தாம் தவணைக்கான இரண்டாவது கூட்டத் தொடரை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் வரும் ஜூலை மாதம் 25 ஆம் தேதி தொடக்கி வைப்பார்.

இந்த கூட்டத் தொடரில் மாநிலத்தின் மேம்பாட்டு இலக்கை தீர்மானிக்கக்கூடிய முதலாவது சிலாங்கூர் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம் கூறினார்.

மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் தாக்கல் செய்யவுள்ள இந்த  முதலாவது சிலாங்கூர் திட்டம், அடுத்த ஐந்து முதல் பத்தாண்டுகளுக்கான மாநிலத்தின் முறையான திட்டமிடலை இலக்காகக் கொண்டிருக்கும் என்று அவர் சொன்னார்.

இது மலேசியத் திட்டத்தைப் போல் இருந்தாலும் சிலாங்கூருக்கான பிரத்தியேக உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் என்றார் அவர்.

சமூக பொருளாதாரம் , கலாசாரம்,கல்வி, நிதி நிர்வாகம், அரசியல் ஆகியவற்றுக்கான இலக்கை தீர்மானிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சட்டமன்றக் கூட்டம் நடைபெறுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் கூட்டத்திற்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகள் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆகஸடு மாதம் 5 ஆம் தேதி வரை நடைபெறும் இக்கட்டத் தொடரில் அனைத்து துறைத் தலைவர்களும் பங்கேற்பர் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.

Pengarang :