பெட்டாலிங் ஜெயா, மே 8- கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 121,987 குடும்பத்தினருக்கு மாநில அரசின் பந்துவான் பங்கிட் சிலாங்கூர் (பி.எஸ்.பி.) திட்டத்தின் கீழ் தலா 1,000 வெள்ளி வழங்கப்பட்டது.
இத்திட்டத்திற்காக கடந்த வியாழக்கிழமை வரை 12 கோடியே 20 லட்சம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அந்த மோசமான வெள்ளப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உதவித் தொகை வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த உதவி நிதி வழங்கப்பட்டது என்றார் அவர்.
அசாதாரண மற்றும் கடுமையான சூழலில் நாம் இறைவனால் சோதிக்கப்பட்டோம். சோதனைகளைத் தாங்கும் சக்தியால் அனைத்தையும் கடந்து மக்கள் நலத் திட்டத்தை ஆக்ககரமான முறையில் வடிவமைத்தோம் என்றார் அவர்.
நேற்று இங்கு காகாசான் கித்தாசெமுவா கெஅடிலான் இயக்கத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்தாண்டு மார்ச் மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு 10 கோடி வெள்ளி நிதியில் பி.எஸ்.பி. எனப்படும் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தை தொடக்கியது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,000 வெள்ளியும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு 10,000 வெள்ளியும் வழங்குவதையும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அடிப்படை வசதிகளை சீரமைப்பதையும் இந்த திட்டம் நோக்கமாக கொண்டிருந்தது.