புத்ரா ஜெயா, மே 9- எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் 4 கோடியே 20 லட்சம் வெள்ளி நிதியை மோசடி செய்ததற்காக தமக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் செய்து கொண்ட மேல் முறையீட்டு மனுவை கூட்டரசு நீதிமன்றம் வரும் ஆகஸ்டு மாதம் 10 நாட்களுக்கு விசாரிக்கும்.
இந்த வழக்கு வரும் ஆகஸ்டு மாதம் 15 முதல் 19 வரையிலும் 22 முதல் 26 வரையிலும் நடைபெறும் என்று கூட்டரசு நீதிமன்ற துணை பதிவதிகாரி ஹபிஸூல்லா முகமது சாலே கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.
எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் நிறுவனத்திற்குச் சொந்தமான 4 கோடியே 20 லட்சம் வெள்ளியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து தாம் ஏன் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்கான 94 அம்சங்களை நஜிப் தனது மேல் முறையீட்டு மனுவில் தாக்கல் செய்துள்ளார்.
தமக்கு (நஜிப்) எதிரான எழு குற்றச்சாட்டுகளிலும் அடிப்படை முகாந்திரம் உள்ளதை அரசுத் தரப்பு நிரூபித்துள்ளதால் தாம் தற்காப்பு வாதம் புரிய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்ததை உறுதி செய்ததன் மூலம் மேல் முறையீட்டு நீதிமன்றம் தவறிழைத்துள்ளதாக நஜிப் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் நிறுவனத்திற்குச் சொந்தமான 4 கோடியே 20 லட்சம் வெள்ளியை தவறாகப் பயன்படுத்தியதற்காக நஜிப்பிற்கு உயர் நீதிமன்றம் விதித்த 12 ஆண்டுச் சிறைத்தண்டனை மற்றும் 2 கோடியே 10 லட்சம் வெள்ளி அபராத த்தை மேல் முறையீட்டு நீதிமன்றம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி நிலை நிறுத்தியது