ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 தடுப்பூசி பெற்ற சிறார்கள் எண்ணிக்கை 27.5 விழுக்காடாக உயர்வு

கோலாலம்பூர், மே 12- “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 976,336 பேர் அல்லது 27.5 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 44.5 விழுக்காட்டுச் சிறார்கள் அல்லது 15 லட்சத்து 80 ஆயிரத்து 723 பேர் முதல் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நாட்டிலுள்ள பெரியவர்களில் 1 கோடியே 60 லட்சத்து 53 ஆயிரத்து 311 பேர் அல்லது 68.2 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

மேலும், 2 கோடியே 29 லட்சத்து 69 ஆயிரத்து 986 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்ற வேளையில் 98.8 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 32 லட்சத்து 45 ஆயிரத்து 293 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

12 முதல் 17 வயதான இளையோரில் 93.2 விழுக்காட்டினர் அல்லது 29 லட்சத்து  460 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர். மேலும், 96.3 விழுக்காட்டினர் அல்லது 29 லட்சத்து 98 ஆயிரத்து 074 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நேற்று நாடு முழுவதும் 29,791 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 12,393  பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 14,168 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 3,230 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 7 கோடியே 5 லட்சத்து 10 ஆயிரத்து 766 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, நாட்டில் நேற்று கோவிட்-19 தொடர்புடைய 8 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.


Pengarang :