கோல லங்காட், மே 15- முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் மாநில அரசிடமிருந்து மானியம் பெறுவதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம்.
சமய அமைப்புகளின் நிதி கோரிக்கை தொடர்பான விண்ணப்பங்களை விரைந்து பரிசீலிப்பதற்கு இந்த நடைமுறை துணை புரியும் என்று பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தோ சமய விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தே தெங் சாங் கிம் கூறினார்.
இந்த இணைய வழி விண்ணப்பத் திட்டம் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டதாக கூறிய அவர், இம்மாதம் 6 ஆம் தேதி வரை 330 விண்ணப்பங்களை வழிபாட்டுத் தலங்களிடமிருந்து தாங்கள் பெற்றுள்ளதாகச் சொன்னார்.
நேற்று இங்குள்ள ஜென்ஜாரோம் ஃபூங் குவாங் டோங் ஸென் ஆலயத்தில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில நிலையிலான விசாக தின கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
சமய அமைப்புகள் limas.selangor.gov.my என்ற அகப்பக்கம் வாயிலாக இந்த திட்டத்தில் தங்களைப் பதிந்து கொள்ளலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மானியத்திற்காக செய்யப்படும் விண்ணப்பங்கள் முழுமையாக இருக்க வேண்டும் என்பதோடு தேவைப்படும் ஆவணங்களையும் அந்த அகப்பக்கத்தில் உள்ளிட வேண்டும் என்றார் அவர்.
தங்கள் விண்ணப்பம் தொடர்பான ஆகக் கடைசி நிலவரங்களை விண்ணப்பதாரர்கள் இந்த அகப்பக்கத்தில் அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.