ஷா ஆலம், மே 16- கோத்தா ராஜா கெஅடிலான் தொகுதியின் ஏற்பாட்டிலான நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு மற்றும் கித்தா செமுவா கெஅடிலான் பேரணி இன்று இங்குள்ள செக்சன் 32, புக்கிட் நாகா எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கெஅடிலான் கட்சியின் சிலாங்கூர் மாநில தலைமைத்துவ மன்றத் தலைவரும் மந்திரி பெசாருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.
சுங்கை காண்டீஸ் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான முகமது ஜவாவி அகமது முக்னி , செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ், புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரிய ஜூல்கிப்ளி ஆகியோரும் பங்கேற்றனர்.
இன்று நண்பகல் வரை சுமார் 500 பேர் இந்த உபசரிப்பில் கலந்து கொண்டனர்.
முஸ்லீம்கள் மட்டுமின்றி இதர இனத்தினரும் இந்த உபசரிப்பில் கலந்து சிறப்பித்தனர்.
தொகுதி மக்களுக்கு பெருநாள் உபசரிப்பை வழங்கும் அதே வேளையில் 2022 ஆம் ஆண்டிற்கான கட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நோக்கிலும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.