சுபாங் ஜெயா, மே 25- சுபாங் ஜெயாவில் இம்மாதம் 14 ஆம் தேதி வரை 799 கை,கால், வாய்ப்புண் நோய் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சுபாங் ஜெயா மாநகர் மன்ற ஏற்பாட்டில் நடத்தப்படும் பாலர் பள்ளியிலும் இத்தகைய 17 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுபாங் ஜெயா டத்தோ பண்டார் டத்தோ ஜோஹாரி அனுவார் கூறினார்.
யுஎஸ்ஜே 3 பாலர் பள்ளி மற்றும் குவார்ட்டஸ் பெர்மாத்தா சாரி பாலர் பள்ளி ஆகியவற்றில் இச்சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சிறார்கள் மத்தியில் இந்நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மாநகர் மன்றப் பணியாளர்கள் சிறார் பராமரிப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு சில விளக்கமளிப்பு நிகழ்வுகளை மாநகர் மன்றம் ஏற்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்குள்ள மாநகர் மன்ற தலைமையகத்தில் மாநகர் மன்றத்தின் இவ்வாண்டிற்கான ஐந்தாவது முழு அளவிலான கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
கடந்த மே மாதம் 21 ஆம் தேதி வரை நாட்டில் 47,209 கை, கால், வாய்ப்புண் நோய்ச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா நேற்று கூறியிருந்தார்.