ஷா ஆலம், ஜூன் 15- பதிமூன்று வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை 17 வயது இளைஞர் பாரிட் புந்தார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஒப்புக் கொண்டார்.
மாஜிஸ்திரேட் முகமது சைபுல் அக்மால் முகமது ராஸி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அந்த பதின்ம வயது ஆடவர் இந்த ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
கடந்த மே மாதம் 7 ஆம் தேதி பிற்பகல் 1.10 மணியளவில் தஞ்சோங் பியாண்டாங்கிலுள்ள வீடொன்றில் இக்குற்றத்தை புரிந்ததாக அவ்வாடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு வரையிலானச் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 376(1) பிரிவின் கீழ் அவ்வாடவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.
இரசாயன அறிக்கையைப் பெறுவதற்கு ஏதுவாக இந்த வழக்கை ஜூலை 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த மாஜிஸ்திரேட், குற்றஞ்சாட்டப்பட்டவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 2,500 வெள்ளி ஜாமினில் விடுவிக்க அனுமதி வழங்கினார்.
கடந்த மே 25 ஆம் தேதி தனது பேத்தி கற்பழிக்கப்பட்டதாக அவரின் பாட்டி போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து அந்த இளைஞரை போலீசார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர்.