ECONOMY

ஜோகூர் ரீஜண்டாக துங்கு இஸ்மாயில் நியமனம்- இன்று முதல் அமலுக்கு வருகிறது

இஸ்கந்தார் புத்ரி, ஜூன் 16- தனது மூத்த புதல்வர் துங்கு மக்கோத்தா ஜோகூர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமை ரீஜண்டாக நியமனம் செய்ய மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் அல்மார்ஹும் சுல்தான் இஸ்கந்தார் ஒப்புதல் அளித்துள்ளார்.

இங்குள்ள சுல்தான் இஸ்மாயில் கட்டிடத்தில் 15வது ஜோகூர் சட்டமன்றத்தின் முதல் தவணைக்கான இரண்டாவது கூட்டத் தொடரை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இத்தகவலை வெளியிட்டார்.

துங்கு மக்கோத்தா ஜோகூரை ரீஜண்டாக நான் நியமனம் செய்துள்ளேன். நான் ஓய்வு எடுக்க விரும்புகிறேன். இன்று முதல் இது அமலுக்கு வருகிறது. நன்றி, என அவர் கூறினார்.
எனினும், எவ்வளவு நாட்களுக்கு துங்கு இஸ்மாயில் ரீஜண்டாக நீடிப்பார் என்பதை சுல்தான் தெளிவுபடுத்தவில்லை.

ஆகக் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு 10 ஆம் தேதி துங்கு இஸ்மாயில் ஜோகூர் ரீஜண்டாக நியமிக்கப்பட்டார்.

ஜோகூர் டாருள் தாக்ஸிம் கால்பந்து கிளப்பின் உரிமையாளரான துங்கு இஸ்மாயில் அந்த கிளப்பை நடத்துவதிலிருந்து தாம் விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார்.

அந்த கிளப்பை தினசரி அடிப்படையில் வழி நடத்தும் பொறுப்பை அதன்  தலைமை நிர்வாகத்தினரிடம் ஒப்படைப்பதாக அவர் கூறினார்.


Pengarang :