சுபாங் ஜெயா, ஜூன் 21– சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் 2035 ஊராட்சி திட்டமிடல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 16 மேம்பாட்டாளர்களும் நில உரிமையாளர்களும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
அதில் குடியிருப்பு நிலத்தில் இரும்புத் தொழிற்சாலையை அமைத்தது மற்றும் வீடமைப்பு பகுதிகளில் கனரக வாகனங்களை நிறுத்தியது ஆகிய குற்றங்கள் பத்து பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டதாக சுபாங் ஜெயா மாநகர் மன்ற டத்தோ பண்டார் டத்தோ ஜோஹாரி அனுவார் கூறினார்.
அனுமதியின்றி சிறார் பராமரிப்பு மையங்களை அமைத்தது, குடியிருப்பு பகுதிகளில் கால்நடை வளர்ப்பு மையங்களை நடத்தியது மற்றும் குடியிருப்பு லாட் நிலங்களில் தளவாடப் பொருள் விற்பனை மையங்களை நடத்தியது தொடர்பில் இதர 16 பேர் மீது குற்றஞ்சாட்டு கொண்டு வரப்பட்டது என்றார் அவர்.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 100,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கும் மேற்போகாத சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 1976 ஆம் ஆண்டு நகர் மற்றும் கிராம திட்டமிடல் சட்டத்தின் 27(2)(ஏ) கீழ் அவர்கள் அனைவரும் குற்றஞ்சாட்டப்பட்டனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சட்ட மீறல்களை தடுப்பதற்கு ஏதுவாக சட்டவிரோதமாக செயல்படும் தொழிற்சாலைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மாநகர் தீவிரமாக மேற்கொள்ளும் என்றும் அவர் சொன்னார்.