ECONOMYHEALTHSELANGOR

“ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங்“ திட்ட அறிமுக நிகழ்வு  ஜூன் 25இல் பந்தாய் மோரிப்பில் நடைபெறும் 

ஷா ஆலம், ஜூன் 22– பல்வேறு புதிய நலத் திட்டங்களையும் பெருகூட்டப்பட்ட நடப்புத் திட்டங்களையும் மக்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கிலான “ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங்” திட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை கோல லங்காட், பந்தாய் மோரிப்பில் நடைபெறும்.

இந்த விளக்கமளிப்பு பயணத் தொடர் மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களிலும் மாறுபட்ட அம்சங்களுடன் நடத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மக்கள் நலத் திட்டங்களை மறு அறிமுகம் செய்யும் நோக்கிலான இந்த முயற்சிக்கு சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் அல்லது இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் எனப் பெயரிடப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

கடந்த வாரம் அம்பாங், தாமான் கோசாசில் நடத்தப்பட்ட இந்நிகழ்வு வரும் ஜூலை 2 ஆம் தேதி கோல சிலாங்கூர் பிரதான அரங்கில் நடைபெறவுள்ளது. வரும் ஜூலை 26 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற போலவாட் சதுக்கத்திலும் 31 ஆம் தேதி பத்து கேவ்ஸ் பொது திடலிலும் இந்நிகழ்வு நடைபெறும்.

காலை 7.30 மணி தொடங்கி மாலை 5. 30 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் கலைஞர்களின் இசைப் படைப்புகள், ஏரோபிக் நிகழ்வு, சமையல் போட்டி, மக்கள் விளையாட்டு உள்ளிட்ட அங்கங்கள் இடம் பெறும்.

அதிகமான மாநில மக்கள் பயன் பெறும் வகையில் பெடுலி ராக்யாட் திட்டத்திற்கு மாற்றாக 35 கோடி வெள்ளி நிதியில் புதிய திட்டங்களை மாநில அரசு அறிமுகப்படுத்துகிறது. சுமார் 25,000 பேர் பயன் பெற்று வந்த கிஸ் எனப்படும் ஸ்மார்ட் சிலாங்கூர் பரிவு அன்னையர் திட்டத்திற்கு பதிலாக 30,000 பேர் பயன்பெறக்கூடிய பிங்காஸ் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

இது தவிர, கடும் நோய்களை முன்கூட்டியே கண்டறியும் நோக்கில் மேற்கொள்ளப்படும் சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்திற்கு 15 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஐயாயிரம் பேர் வரை பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :