ECONOMYSELANGOR

ஷா ஆலம் அரங்கை மேம்படுத்தும் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்-மந்திரி புசார்

கோல லங்காட், ஜூன் 26- ஷா ஆலம் அரங்கை மேம்படுத்துவது தொடர்பான திட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அந்த மேம்பாட்டுத் திட்டம் ஷா ஆலம் விளையாட்டுத் தொகுதி முழுவதையும் உள்ளடக்கியிருக்கும் என்று அவர் தெரிவித்தார். பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் சிறப்பு செயல்குழு செய்யும் மதிப்பீட்டின் அடிப்படையில் அந்த மேம்பாட்டுத் திட்டம் வரையப்படும் என்றார் அவர்.

இவ்விவகாரத்தில் ஏன் இவ்வளவு தாமதம் என்று பலர் கேட்கின்றனர். இத்திட்டத்தை விரிவான அளவில் மேற்கொள்வதற்காக இந்த மதிப்பீட்டை நாம் செய்கிறோம் வெறும் பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொள்வதாக இருந்தால் கடந்தாண்டே அதனைத் செய்திருப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.

மேம்பாடு தொடர்பான மதிப்பீடு ஷா ஆலம் அரங்கை மட்டும் மையமாக கொண்டிருக்கவில்லை. மாறாக, மெலாவத்தி அரங்கம் உள்பட அனைத்துப் பகுதிகளையும் அது உள்ளடக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

இங்குள்ள டத்தாரான் மோரிப்பில் நேற்று நடைபெற்ற ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அப்பகுதியில் அமைக்கப்படும் எல்.ஆர்.டி. நிலையத்திற்கு ஏற்ப அந்த விளையாட்டுத் தொகுதியின் மேம்பாடும் அமையும் எனவும் மந்திரி புசார் குறிப்பிட்டார்.


Pengarang :